Posts filed under 'எரிபொருள்'

கழிவு மூலம் எரியும் தெருவிளக்குகள்

சென்னையை அடுத்த திருநீர்மலையில் உள்ள TNHB காலனியில் கழிவுப் பொருட்கள் மூலம் மின்சாரம் தயாரித்து தெருவிளக்குகளை எரியவைக்கும் சோதனை கடந்த சனிக்கிழமை அன்று நடந்தது. அதின்படி காலனியில் உள்ள 240 இல்லங்களிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து மீத்தேன் எரிவாயு தயாரித்து, அதன் மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த மின்சார சக்தி அங்கிருந்த தெரு விளக்குகளை இயக்க பயன்படுத்தப்பட்டது. இந்த சோதனை திருப்திகரமாக இருந்ததாக சோதனை செய்தவர்கள் குறிப்பிட்டனர். மேலும் விவரங்களுக்கு: The Hindu: Tiruneermalai can now use biogas for streetlights

மாநகரங்களில் குப்பை, கழிவுநீர் போன்றவற்றை அகற்றுவது பெரும் சவாலாகவே உள்ளது. இந்த கழிவுகளை பயன்படுத்தி எரிபொருள் தயாரித்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! குறைந்த செலவில் எரிபொருளும் தயாரிக்கலாம், சுற்றுச் சூழல் மாசடைவதையும் தடுக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு வழிவகுக்கும் மற்றொரு முக்கிய காரணி பாலிதீன் பைகள். ஆம், துணிக்கடை முதல் காய்கறி கடை எங்கும் பொருட்களை வைத்து தர பயன்படும் அதே பாலிதின் பைகள் தான். மிகவும் சௌகர்யமான, எளிமையான பைகள் தான். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த பாலிதின் பைகள் மக்காத தன்மை கொண்டவை. சரியான முறையில் அகற்றாமல், மறுசுழற்சி செய்யாமல் விட்டால் சுற்றுச்சூழல் பெருமளவு மாசடையும். சென்ற வருடம் மும்பையில் மழை பெய்து பெருவெள்ளம் வந்தது நினைவிருக்கலாம். மும்பை மக்கள் தூக்கியெறிந்த பாலிதீன் பைகள் மக்காமல் பெருகிப்போய் மும்பை நீர்நிலைகளை அடைத்துக் கொண்டதே வெள்ளத்திற்கு முக்கிய காரணம் (Global warming மற்றொரு முக்கிய காரணம்).

சரி, இந்த ப்ளாஸ்டிக் பைகளை வைத்துக்கொண்டு என்ன தான் செய்வது? ‘ரோடு போடலாம்’ என்று சொல்கிறார் மதுரை தியாகராய கல்லூரியின் டீன் ஆர். வாசுதேவன். ப்ளாஸ்டிக் குப்பைகளை உருக்கி தார் உடன் கலந்து போடப்படும் ரோடு மிகவும் உறுதியாக விளங்கும் என அவர் கூறுகிறார். ஒரு டன் ப்ளாஸ்டிக் குப்பையை பயன்படுத்தி ஒரு கிலோமீட்டர் ரோடு போடலாமாம்! மேலும் விவரங்களுக்கு: The Hindu: “Adoption of innovative technologies vital for nation’s development”

தொடர்பான இணைப்புகள்:

ஸ்வீடன் நாட்டில் மதுபானம் எரிபொருளாக மாற்றப்படுவது பற்றி முன்பு பதிந்திருந்தேன். அதையும் பார்க்கவும்.


Add comment ஜூலை 9, 2007

எரிபொருளாகும் மதுபானம்

ஸ்வீடன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்படும் மதுபான சரக்கு சாதாரணமாக கீழே கொட்டப்பட்டு வீணாக்கப்படும். சென்ற வருடம் இப்படி கைப்பற்றப்பட்ட 7 லட்சம் லிட்டர் (அம்மாடியோவ்!!) மதுபான வகைகளை எரிபொருளாக மாற்ற அந்நாட்டில் முடிவெடுக்கப் பட்டது. இதன்படி இந்தக் ‘குடி’ நீருடன் மிருகக் கழிவுகளையும் சேர்த்து எரித்து பயோ வாயு (bio gas) தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் மிகவும் தூய்மையானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில் ஓடும் பேருந்துகளில் இருபத்தைந்து சதவிகித பேருந்துகள் இப்படி தயாரிக்கப்டும் மாசற்ற எரிபொருளின் உதவியுடன் இயக்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு பார்க்க: Alcohol, Feces, Carcasses Fuel “Green” Vehicles in Sweden. சுற்றச் சூழலை மாசுபடுத்தம் எரிபொருள்களை அதிகமாக பயன்படுத்துவதால் புவி வெப்பம் அதிகமாகி உலகமே அழிவுகளை எதிர்நோக்கும் இந்நேரத்தில் இப்படிப்பட்ட தூய எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பதாக கருதப்படும் ஒரு திரவம் ‘குடி’ மக்களின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக இது போன்ற ஆக்கப்பூர்வமாக விஷயங்களுக்கு பயன்படுத்தப் படுவதால் உலகத்துக்கே எவ்வளவு நன்மை பாருங்கள்!

இதே போல், hemp எனப்படும் தாவரம் ஒன்றைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். இத்தாவரம் எரிபொருள், காகிதம், துணி, கயிறு போன்ற பல பொருட்கள் செய்வதற்கு பயன்படக் கூடியது. வேகமாக வளரக்கூடியது, மேலும் இதை வளர்ப்பதற்கு குறைந்த செலவே ஆகும். இதைப் பயன்படுத்தி காகிதம் போன்ற பொருட்களை தயாரித்தால் காடுகள் அழிவது பெருமளவில் தடுக்கப்படும். ஆனால் இதை வளர்க்க US உட்பட பல நாடுகளில் தடை உள்ளது. மனித சமுதாயத்துக்கு மிகவும் பயன் தரக்கூடிய இத்தாவரம் அதே சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் போதைப் பொருட்கள் தயாரிக்கவும் உதவுவக்கூடியது என்பது தான் காரணம். இது இயற்கையின் தவறா? அல்லது மனிதனின் சுயக் கட்டுப்பாடின்மையா?

உலகத்திலேயே மிகவுயர்ந்த இனம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் மனிதர்களாகிய நாம் ஒரு பொருளில் உள்ள தீமையை தவிர்த்து அப்பொருளை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் தன்மை இல்லாதவராய் இருக்கிறோம். இயற்கையையே மிஞ்சக் கூடிய அரிய சாதனங்களை கண்டுபிடிப்பதாக மார்தட்டிக் கொண்டு இயற்கையை வெல்ல முயலும் நாம் முதலில் நம்மை நாமே வெல்ல முயல்கிறோமா? நம்முடைய தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்கிறோமா?

இயற்கை அன்னை நமக்கு தேவையானதெல்லாம் தேவையான அளவுக்கு வாரித்தான் வழங்குகிறாள். நாம் தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். பிறகு இயற்கையையும், நாமாக கண்டுபிடித்த கடவுள்களையும் குறை சொல்லிப் புலம்புகிறோம்.

Earth provides enough to satisfy every man’s need, but not any man’s greed.

இதைச் சொன்னவர் மோகன்தாஸ் காந்தி என்ற பெயரைக் கொண்ட மாமனிதர்.


Add comment ஜூன் 27, 2007


குறிச்சொற்கள்

அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ Uncategorized

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics