புலிகளுடன் வாழும் புத்த பிட்சுக்கள்
தாய்லாந்து நாட்டு காஞ்சனபுரி பகுதில இருக்கிற வாட் பா லுவாங்தா புவா புத்த ஆசிரமத்தில தான் இந்த அதிசயம் நடக்குது. இந்த ஆசிரமம் தொடங்கப்பட்ட 1994ஆம் வருஷத்திலேயிருந்தே மான், மயில் போன்றவை சுதந்திரமா சுற்றித் திரியும் விலங்குகளின் சரணாலயமாவும் இருந்துட்டு வருது. 1999ம் வருஷம் தான் இங்கே முதன்முதலா புலி வளர்க்க ஆரம்பிச்சாங்க. அப்போ கடத்தல்காரர்களால அனாதையாக்கப்பட்ட சில புலிக்குட்டிகள் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தது. இன்றைய நிலவரப்படி இந்த புத்த ஆசிரமத்தில பதினெட்டு புலிகள் பிட்சுகளோட வாழ்ந்துட்டு வருது.

இந்த புலிகள் வாழும் புத்த ஆசிரமத்தை பத்தி கொஞ்ச நாள் முன்னாடி தொலைக்காட்சியில பார்த்தேன். பெரும்பாலான நேரம் சர்க்கஸ் புலிகள் மாதிரி இந்தப் ஆசிரமப் புலிகள் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தாலும் அப்பப்போ பிட்சுகளின் கண்காணிப்போட ஆசிரம வளாகம் முழுவதும் வலம் வருது, புத்தர் சிலைக்குப் பின்னாடி புலிக்குட்டிகள் ஒளிஞ்சு கண்ணாமூச்சி ஆடுது! தாய்லாந்து புத்த பிட்சுக்கள் ஒரு தாய் போல புலிக்குட்டிகளுக்கு (புட்டிப்) பாலூட்டி, தாலாட்டி உறங்க வைக்கிறாங்க. பிட்சுக்கள் பக்கத்திலே போய் அவர்கள் மீது பாசத்தோட புலிகள் உரசும் காட்சி அலாதியானது.
இறைச்சியை இரத்த வாடை வராம வேக வைச்சு உலர்த்தி புலிகளுக்கு உணவா கொடுக்கிறாங்க. என்ன தான் இருந்தாலும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சமயங்களில் அங்கே வாழும் மான்களையும் மத்த மிருகங்களையும் பார்க்கும் போது உறுமல், திமிறல் எல்லாம் கொஞ்சம் தலை காட்டத்தான் செய்யுது. ஆனாலும் புத்த பிட்சுக்கள் செல்லமா தட்டி, தடவிக்கொடுத்து அதட்டும்போது இந்த புலிகள் அப்படியே சாதுவா அடங்கிப் போயிடுது.

கடத்தல்காரர்களிடமிருந்து புலிகளைக் காப்பாற்றி அடைக்கலம் தந்து, அன்பினால அவைகளின் குணத்தையே மாற்றி, செல்லப் பிராணிகள் போல வளர்த்து வரும் இந்த புத்த பிட்சுக்கள் கண்டிப்பா புத்தர் வலியுறுத்திய ஜீவகாருண்யத்தை இன்னைக்கும் காப்பாத்திட்டு வராங்க.
மேலும் விவரங்களுக்கு பார்க்க: புலிக்கோயில் வலைத்தளம், புலிக்கோயில் பற்றிய தமிழ் விக்கிபீடியா கட்டுரை, விரிவான ஆங்கில விக்கிபீடியா கட்டுரை.
தாய்லாந்து நாட்டில மட்டும் இல்லை, உலகத்தின் மத்த பகுதிகளிலும் புலிகளும், புத்தரை பின்பற்றுவதா சொல்லிக்கிறவங்களும் அமைதியுடன் ஒற்றுமையா வாழனும்கிறது தான் என் விருப்பம். ![]()
Add comment ஜூன் 18, 2007