குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய பள்ளிச் சிறுமிகள்
பங்களாதேஷில் இன்று நடக்கிவிருந்த குழந்தை திருமணம் ஒன்று பரபரப்பான முறையில் தடுக்கப்பட்டது. பங்களாதேஷின் சத்கீரா எனும் ஊரில் உள்ள அப்துல் கரீம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதிமூன்று வயது மாணவி ஹபீபா சுல்தானா. இவளை இருபத்து மூன்று வயதான இளைஞர் ஒருவருடன் திருமணம் முடிக்க திட்டமிட்டிருந்தார் வறுமையில் வாடும் பெண்ணின் தந்தை. சிறுமி ஹபீபாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும், அவளால் தன் தந்தையின் முடிவை மறுக்கும் துணிவில்லை. இந்நிலையில் தன் வகுப்புத் தோழிகளிடம் தனக்கு கட்டாய திருமணம் நடக்கவிருக்கும் விபரத்தை கூறியிருக்கிறாள் ஹபீபா. உடனே இக்கட்டில் இருந்த தன் தோழிக்கு ஆதரவாக ஒன்று கூடி தங்கள் குரலை உயர்த்தினர் இந்த பள்ளிச் சிறுமியர். கிட்டத்திட்ட 50 பள்ளி மாணவிகள் பள்ளியின் எதிரில் ஒன்று கூடி ஹபீபாவின் திருமணத்தை நிறுத்துமாறு போராட்டம் நடத்தினர். மாணவிகளின் பெற்றோர்களும் ஹபீபாவின் தந்தையிடம் திருமணத்தை நிறுத்துமாறு பேசிப்பார்த்தனர். ம்ஹூம், இதற்கெல்லாம் அசைந்துகொடுக்கவில்லை ஹபீபாவின் தந்தை. சிறுமிகளும் விட்டுக் கொடுக்கவில்லை. சட்டவிரோதமாக ஹபீபாவுக்கு நடக்கவிருக்கும் குழந்தைத் திருமணத்தை தடுக்குமாறு மனு ஒன்றை எழுதி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் இந்த சிறுமியர். அதன் பின் காவல்நிலையத்தினர் ஹபீபாவின் தந்தையை எச்சரித்தவுடன் அவரால் தன் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, குழந்தை திருமணம் தடுக்கப்பட்டது. சிறுமிகள் தங்கள் உரிமையை நிலைநாட்டினர்.
மேலும் விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | Child wedding ’stopped by pupils’
Add comment ஜூலை 13, 2007