Posts filed under 'மதுபானம்'

எரிபொருளாகும் மதுபானம்

ஸ்வீடன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்படும் மதுபான சரக்கு சாதாரணமாக கீழே கொட்டப்பட்டு வீணாக்கப்படும். சென்ற வருடம் இப்படி கைப்பற்றப்பட்ட 7 லட்சம் லிட்டர் (அம்மாடியோவ்!!) மதுபான வகைகளை எரிபொருளாக மாற்ற அந்நாட்டில் முடிவெடுக்கப் பட்டது. இதன்படி இந்தக் ‘குடி’ நீருடன் மிருகக் கழிவுகளையும் சேர்த்து எரித்து பயோ வாயு (bio gas) தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் மிகவும் தூய்மையானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில் ஓடும் பேருந்துகளில் இருபத்தைந்து சதவிகித பேருந்துகள் இப்படி தயாரிக்கப்டும் மாசற்ற எரிபொருளின் உதவியுடன் இயக்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு பார்க்க: Alcohol, Feces, Carcasses Fuel “Green” Vehicles in Sweden. சுற்றச் சூழலை மாசுபடுத்தம் எரிபொருள்களை அதிகமாக பயன்படுத்துவதால் புவி வெப்பம் அதிகமாகி உலகமே அழிவுகளை எதிர்நோக்கும் இந்நேரத்தில் இப்படிப்பட்ட தூய எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பதாக கருதப்படும் ஒரு திரவம் ‘குடி’ மக்களின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக இது போன்ற ஆக்கப்பூர்வமாக விஷயங்களுக்கு பயன்படுத்தப் படுவதால் உலகத்துக்கே எவ்வளவு நன்மை பாருங்கள்!

இதே போல், hemp எனப்படும் தாவரம் ஒன்றைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். இத்தாவரம் எரிபொருள், காகிதம், துணி, கயிறு போன்ற பல பொருட்கள் செய்வதற்கு பயன்படக் கூடியது. வேகமாக வளரக்கூடியது, மேலும் இதை வளர்ப்பதற்கு குறைந்த செலவே ஆகும். இதைப் பயன்படுத்தி காகிதம் போன்ற பொருட்களை தயாரித்தால் காடுகள் அழிவது பெருமளவில் தடுக்கப்படும். ஆனால் இதை வளர்க்க US உட்பட பல நாடுகளில் தடை உள்ளது. மனித சமுதாயத்துக்கு மிகவும் பயன் தரக்கூடிய இத்தாவரம் அதே சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் போதைப் பொருட்கள் தயாரிக்கவும் உதவுவக்கூடியது என்பது தான் காரணம். இது இயற்கையின் தவறா? அல்லது மனிதனின் சுயக் கட்டுப்பாடின்மையா?

உலகத்திலேயே மிகவுயர்ந்த இனம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் மனிதர்களாகிய நாம் ஒரு பொருளில் உள்ள தீமையை தவிர்த்து அப்பொருளை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் தன்மை இல்லாதவராய் இருக்கிறோம். இயற்கையையே மிஞ்சக் கூடிய அரிய சாதனங்களை கண்டுபிடிப்பதாக மார்தட்டிக் கொண்டு இயற்கையை வெல்ல முயலும் நாம் முதலில் நம்மை நாமே வெல்ல முயல்கிறோமா? நம்முடைய தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்கிறோமா?

இயற்கை அன்னை நமக்கு தேவையானதெல்லாம் தேவையான அளவுக்கு வாரித்தான் வழங்குகிறாள். நாம் தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். பிறகு இயற்கையையும், நாமாக கண்டுபிடித்த கடவுள்களையும் குறை சொல்லிப் புலம்புகிறோம்.

Earth provides enough to satisfy every man’s need, but not any man’s greed.

இதைச் சொன்னவர் மோகன்தாஸ் காந்தி என்ற பெயரைக் கொண்ட மாமனிதர்.

Add comment ஜூன் 27, 2007


குறிச்சொற்கள்

Uncategorized அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics