Posts filed under 'மனிதன்'

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
(திருக்குறள்: 314)

சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைப்பக்கத்தில் ஆப்பிரிக்க பழங்குடியனம் ஒன்றில் புழங்கும் ஒரு வித்தியாசமான சடங்கைப் பற்றிப் படித்தேன். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் ஏதாவது செய்து விட்டால் அவருக்கு தண்டனை வழங்கும் சடங்கு தான் இது. பழங்குடியினம் என்றவுடன் சினிமாவில் காட்டுவது போல் ஒரு பெரிய சட்டியை அடுப்பில் வைத்து, குற்றம் செய்தவனை அந்தச் சட்டியில் போட்டு சுட்டு மற்றவர் அனைவரும் இலைதழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு சட்டியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவார்கள் என்பது போல் கற்பனை செய்ய வேண்டாம். இந்த ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் குற்றம் செய்தவரை கிராமத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். கிராம மக்கள் அனைவரும் தத்தம் பணிகளை விட்டுவிட்டு குற்றம் செய்தவரைச் சுற்றி நின்று கொள்வார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக குற்றம் செய்தவரிடம் சென்று குற்றம் செய்தவர் முற்காலத்தில் தமக்குச் செய்த நல்ல காரியங்களை அவருக்கு நினைவு படுத்துவார்கள். இந்த சடங்கு சில நாட்களுக்கு நடக்கும். சடங்கு முடிந்த பின்னர் குற்றவாளியை மறுபடியும் சமூகத்தினுள் மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்தப் பழங்குடியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு உள்ளது. இவர்களிடம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இங்கே குற்றம் செய்தவரை பாதிப்பு ஏற்படுத்தியவராக பார்க்காமல் பாதிக்கப்பட்டவராக பார்க்கிறார்கள். குற்றம் செய்தவர் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை அவர் செய்த நல்ல காரியங்களை அவருக்கே நினைவுபடுத்துகிறார்கள்.

நாம் அனைவரும் தினந்தோறும் சின்னதாகவோ, பெரியதாகவோ ஏதாவது குற்றங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். நாம் குற்றமோ தவறோ செய்வதற்கான காரணம் குற்றம் புரிவதனால் கிடைக்கும் நன்மையினால் அல்ல. உண்மையில் நாம் குற்றம் புரிய காரணம் நம்முள் உள்ள ஏதோவொரு வெறுமையினால் தான். நல்ல மனநிலையில் இருக்கும் ஒருவரும் குற்றம் செய்வதில்லை. சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து நம் செயல்கள் மூலமும் எண்ணங்கள் மூலமும் பாதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஒரு குற்றம் நடக்கும்போது, அதற்கு ஒரு தனி மனிதனை குற்றம் சாட்டுவது சரியல்ல. சமூகத்தில் உள்ள அனைவரின் மனதிலும் உள்ள வெறுப்புணர்ச்சி ஒருசில துரதிர்ஷ்டசாலிகள் மூலம் குற்றங்களாகவும் தீவிரவாதச் செயல்களாகவும் வெளிப்படுகிறது. இதற்கு குற்றவாளியை மட்டும் உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் உலகிலிருந்து குற்றம் போய்விடுமா? இந்த துரதிர்ஷ்டசாலிகளால் மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படு வாய்ப்பிருக்கிறது என்றால் அவரை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், அவருக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்து அவருள் இருக்கும் வெறுப்புணர்ச்சியை போக்க ஏதாவது வழி செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே நமக்குள் சிறிதளவிலோ, பெரிதளவிலோ இருக்கும் வெறுப்புணர்ச்சியை களைந்துகொள்ளும் வரை எத்தனைபேரை தூக்கில் தொங்க விட்டாலும் சமூகத்தில் குற்றம் குறையாது.

இந்த விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்றோர் செய்யும் பணிகள் மகத்தானது. இவர்கள் தங்கள் யோக முறைகளை சிறைவாசிகளுக்கு கற்பித்து அவர்களை புது மனிதர்களாக்குகிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற யோக முறை ஒன்றை நானும் கடந்த சில வருடங்களாக பழகி வருகிறேன். யோகம் செய்வது மூலம் நமக்குள் உள்ள வெறுப்புணர்ச்சிகள் நீங்கி ஆனந்தமும் எல்லா உயிர்கள் மீது அன்பும் தோன்றும் என்பது உண்மை. சமூகத்தில் அன்பு தோன்றினால் குற்றங்களுக்கு இடம் ஏது? அன்பினால் காட்டு விலங்கான புலிகளையே கட்டுப்படுத்த முடியும்போது சமூக விலங்கான மனிதர்கள் எம்மாத்திரம்?

அன்பு மலரட்டும். அமைதி நிலவட்டும். :)


7 comments ஜூலை 29, 2007

கடவுள் சிரிக்கும் தருணங்கள்

கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தை பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, “இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது” என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். “இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. இதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே!” என்று நினைத்துச் சிரிக்கிறார்.

கடவுள் மற்றும் ஒருமுறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள்; வைத்தியர் அவளிடம், “அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்” என்று சொல்கிறார். அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால், யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.

(ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பக்கம்: 515-516)


Add comment ஜூலை 11, 2007

Previous Posts


குறிச்சொற்கள்

அன்பு ஆன்மீகம் இயற்கை ஊனம் எரிபொருள் கடவுள் சாதனை சிந்தனைகள் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் தியானம் நம்பிக்கை நாத்திகம் நித்யானந்தர் புலி பெண்கள் பொறுப்புணர்வு பௌத்தம் மதன் மதுபானம் மனசாட்சி மனம் மனிதநேயம் மனிதன் மருத்துவம் யோகம் விஞ்ஞானம் விவேகானந்தர் வீடியோ Uncategorized

RSS என் புதிய தளம்

RSS என் தலைமையகம்

பதிவுலகம்

Tamil resources

website metrics